மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் அவர்களை கவரும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் அமைக்கப்பட்ட நடைபாதை, சூரிய மின் தொகுதி என்பன திறந்துவைக்கப்பட்டதுடன் பட்டத்திருவிழா மற்றும் பௌர்ணமி கலை விழா என்பன 26.04.2026 அன்று நடத்தப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மேனகா, பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார், மாநகரசபையின் ஆணையாளர் என். தனஞ்செயன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், மாநகரசபை உத்தியோகத்தர்கள், கலாசார அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாநகரசபையினால் நான்கு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நடைபாதை திறந்துவைக்கப்பட்டதுடன் சூரிய சக்தியினால் இயங்கும் மின் ஒளி தொகுதியும் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது பட்டக்கலைஞர்கள் பங்குகொண்ட பட்டத்திருவிழாவும் நடாத்தப்பட்டதுடன் இதன்போது 11பட்டக்கலைஞர்களின் பட்டங்கள் பறக்கவிடப்பட்டதுடன் இதில் மூன்று பட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மாநகரசபையும் இணைந்து நடாத்தும் பௌர்ணமி கலை விழாவும் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையிலும் கல்லடி கடற்கரைக்கு அதிகளவான மக்கள் பொழுதினை கழிக்க வரும் நிலையிலும் அவர்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்க்ள தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வினை கண்டுகளிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.













![]()










