உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு கூடியது!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் கூட்டமொன்று கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் 08..06.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

எதிர்காலத்தில் உலகளவில் ஏற்படக்கூடிய எல்-நினோ நிலைமை காரணமாக இலங்கைக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமாயின், அதனை எதிர்கொள்வதற்கென எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதற்கான ஆயத்தங்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், எல்-நினோ நிலைமையினால் விவசாயத் துறைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. எதிர்வரும் சிறுபோகத்திற்குத் தேவையான நீரை நீர்த்தேக்கங்களில் சேமித்து வைத்தல் மற்றும் குடிநீரைப் பாதுகாப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இது குறித்து மேலும் கலந்துரையாடுவதற்காக உணவுப் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் விசேட கூட்டமொன்றை எதிர்வரும் நாட்களில் நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதுடன், எல்-நினோ நிலைமையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான திட்டங்களைத் தயாரித்து அன்றைய தினம் சமர்ப்பிக்குமாறு கமத்தொழில் அமைச்சு, கமத்தொழில் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட துறைசார் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

டித்வா சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்த நிலைமைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட சவால்களுக்கு முகம்கொடுத்ததைப் போன்றே, வெளிப்புற சவாலான இந்த உலகளாவிய நிலைமையையும் சிறந்த முறையில் கையாள்வதற்கான திட்டங்கள் காணப்படுவதாகவும், அது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இயற்கை அனர்த்தங்களை ஒருபோதும் முன்கூட்டியே கணிக்க முடியாது என்றும், ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலைக்கும் முகம்கொடுப்பதற்காக முன்கூட்டியே திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் (பதில்) ஏ.எல்.கே. விஜேமான்னகே, கமத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.ஏ.ஆர்.டி. விக்ரமஆரச்சி ஆகியோரும் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects