நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக இடை நடுவில் நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது பயணிகள் முனையத்திற்கான கட்டுமானப் பணிகள், எதிர்வரும் நவம்பரில் மீண்டும் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் மீண்டும் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 30 மாதங்களுக்குள் அதனை நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசோமாடா அகியோ ஆகியோருக்கு இடையில் 12.06.2026 அன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகாமைத்துவ பிரதிநிதிகள் குழுவொன்றும் கலந்துகொண்டிருந்தது.
இத்திட்டத்திற்கான கடன் தொகை மற்றும் ஒப்பந்த மதிப்பு தொடர்பான அனுமதிகளை விரைவுபடுத்துவதே இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நடைமுறைகள் பூர்த்தியானதும் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க முடியுமென துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டாவது முனையத்தின் கட்டுமானப் பணிகள் முதலில் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டன.
இதற்காக ஜப்பானிய அரசாங்கத்தினால் 75 பில்லியன் யென் கடனுதவி வழங்கப்பட்டிருந்தது.
எனினும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதன் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
அதன் பின்னர், 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இதற்கான கொள்முதல் செயல்முறைகள் மீண்டும் தொடங்கப்பட்டதுடன், 2025 ஆம் ஆண்டில் ஏலக் கோரல்கள் நிறைவு செய்யப்பட்டு, தற்போது உரிய ஒப்பந்தக்காரர்களைத் தேர்ந்தெடுக்கும் இறுதி வாரத்திற்கு இத்திட்டம் வந்துள்ளது.
அதேவேளை இலங்கை அரசாங்கம், ஜப்பானிய அரசாங்கம் மற்றும் ஜய்க்கா நிறுவனத்துடன் நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர், தற்போதைய அரசாங்கத்தின் மீதுள்ள நம்பகத்தன்மையின் அடிப்படையில், இத்திட்டத்தை முடிப்பதற்குத் தேவையான கடன் தொகையை வழங்க ஜப்பானிய தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்திற்குத் தேவையான கடன் தொகை தொடர்பில் நிதி யமைச்சுடன் விரைவில் கலந்துரையாடி ஒப்புதலைப் பெற்றுக்கொள்ள அமைச்சர் இங்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் மேற்படி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது ஜய்க்கா பிரதிநிதிகள் குழு, முதற்கட்டமாக கடன் தொகையை உறுதிசெய்து கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்றும், இரண்டாம் கட்டமாக கலந்துரையாடப்பட்ட விலையின் அடிப்படையில் ஒப்பந்தத்தை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது என்றும் மேற்படி அமைச்சு தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










