2026 ஆம் ஆண்டிற்கான பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
எனவே முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் 24.06.2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து அவர், அங்கு மேலும் தெரிவிக்கையில்,
2025.09.14 ஆம் திகதி வௌியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், 2026 ஆம் ஆண்டிற்கான பரீட்சைகளுக்கான கால அட்டவணை நடைமுறைப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்கள் அனைத்துப் பரீட்சைகளுக்கும் தோற்றுவதற்குத் தேவையான கற்றல் காலத்தை கருத்திற்கொண்டதன் பின்னரே இந்த கால அட்டவணை தயாரிக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது கூறினார்.
இதன்படி கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையானது ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி முதல் ஏப்ரல் 24 ஆம் திகதி வரையில் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களை எதிர்வரும் ஜூலை மாதத்தில் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதேநேரம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையினை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
12 ஆம் தரத்திற்காக நடைபெறும் பொது தகவல் தொழிநுட்ப பாடத்திற்கான பரீட்சையானது ஒக்டோபர் 24 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் 22.06.2026 அன்று முதல் எதிர்வரும் ஜூலை 16 ஆம் திகதி வரையில் கோரப்பட்டுள்ளன.
இதேவேளை கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை டிசம்பர் 8 ஆம் திகதி முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










