கிராமப்புறங்களில் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச நிலைக்குக் கொண்டு செல்வதற்காக, மாகாண மட்டங்களில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில், இதன் கொள்கைப் பிரகடனமான “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற திட்டத்தின் கீழ், இலங்கையின் முதலாவது வெந்நீர் நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 07.07.2026 அன்று பண்டாரவளையில் நடைபெற்றது.
குறித்த புதிய நீச்சல் தடாகம் பண்டாரவளையில் அமைந்துள்ள ஊவா மாகாண விளையாட்டு வளாகத்தில் அமையவுள்ளது.
இந்த அதிநவீன விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ. 144,191,250.00 இற்கும் அதிகமான நிதி மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் மிகக் குறுகிய காலத்திற்குள் கட்டி முடிக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
குளிர்ச்சியான காலநிலை நிலவும் பண்டாரவளைப் பகுதியில் இந்த வெந்நீர் நீச்சல் தடாகம் அமைக்கப்படுவதன் மூலம், ஊவா மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை பிள்ளைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை எவ்வித காலநிலைத் தடைகளுமின்றி சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கு இது ஒரு சிறந்த தளமாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில், அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










