2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுற்றுலாத் துறை மூலம் 475.6 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 50.5 பில்லியன் ரூபாய் ஈட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நடப்பு ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில் மட்டும் 138,730 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர்.
அவர்களின் எண்ணிக்கை 31,734 ஆகும். இது மொத்தச் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 23 சதவீதமாகும். மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) 14,959 பேரும், சீனாவிலிருந்து 8,484 பேரும், நெதர்லாந்திலிருந்து 8,415 பேரும் வருகை தந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, இவ்வருடத்தின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்தச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,285,303 ஆக அதிகரித்துள்ளது. இதிலும் அதிகபட்சமாக இந்தியாவிலிருந்து 325,417 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 123,526 பேரும் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சர்வதேச மட்டத்தில் கிடைக்கும் சாதகமான பதிலளிப்புகள் காரணமாகவே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த பொருளாதார வளர்ச்சி நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதற்கும், சுற்றுலாத் துறை சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பெரும் பக்கபலமாக அமைந்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()








