“சுத்தமான இலங்கை” (Clean Sri Lanka) “அத்தம” (Aththama) தேசிய செயற்திட்டத்தின் கீழ், தேசிய தூய்மை நாளை முன்னிட்டு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான வேலைத்திட்டம் பான்சேனை மயான வளாகத்தில் மாவட்ட நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டது.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கே.பிரபு முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக 23 ஆவது காலாட்படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கே.ஏ.டி.சி.ஆர்.கன்னங்கர, மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் கோபாலப்பிள்ளை, வவுணதீவு சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் எஸ்.இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
காலை 9:30 மணியளவில் பான்சேனை மயானப் பகுதியில் ஆரம்பமான இச்சிரமதான நிகழ்வில், அப்பகுதியைத் தூய்மைப்படுத்தும் பணிகளும், கழிவுகளை முறைப்படி அகற்றும் நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.
இப்பணியில் மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாதுகாப்புப் படையினர், பொலிஸார், சுகாதாரத் துறையினர், பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சூழலைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டதுடன், அப்பகுதியில் யானை அச்சுறுத்தல் நிலவுவதனால் பற்றைக் காடுகளையும் துப்பரவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.














இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()






