நாட்டில் டெங்கு பரவல் காரணமாக இதுவரை அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்தைக் கடந்துள்ளதோடு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 68 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடுதழுவிய ரீதியில் இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் 15.08.2026 அன்று வரையான காலப்பகுதியில் சுமார் 92,011 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ள போதும், நாளொன்றில் 300 க்கும் அதிகளவான நோயாளர்கள் தற்போது அடையாளம் காணப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தில் கடந்த மாதமே அதிகளவான டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அந்தவகையில் ஜூலை மாதம் 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, ஜூன் மாதம் 21,533 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இம்மாதத்தில் கடந்த 15 நாட்களில் 6671 நோயாளர்களும் நேற்று முன்தினம் மாத்திரம் 320 பேர் பதிவாகியுள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையில் மேல் மாகாணத்தில் 52.96 சதவீதமானோரும் (48,725), தென் மாகாணத்தில் 14.71 சதவீதமான (13,533) நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
தொடர்ந்து கம்பஹா, கொழும்பு, கண்டி, மாத்தறை, களுத்துறை, காலி, இரத்தினபுரி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்கள் உட்பட கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகுவதைக் காணக் கூடியதாக உள்ளது.Geographic Reference
நோயாளர் அதிகரிப்போடு டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 68 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் 96 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் நுளம்பு பரவலைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார அமைச்சின் கீழ் பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் முப்படையினரும் இணைந்து நுளம்பு குடம்பி சோதனை உள்ளிட்ட நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆகையால் பொதுமக்களும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமது சமூகப்பொறுப்பை உணர்ந்து சுற்றுப்புற சூழலைத் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()








