2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைய, வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் ஒப்பந்த மற்றும் தற்காலிக அடிப்படையில் பணியாற்றிய 197 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் 17.08.2026 அன்று வழங்கப்பட்டன.
இந் நிகழ்வு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பொறியியலாளர் ஆசிரி கருணாவர்தன தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிரந்தர வேலைவாய்ப்பு உறுதியின்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்த இந்த ஊழியர்கள், புதிய நியமனத்தின் மூலம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிரந்தர ஊழியர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன்படி மேல் மாகாணத்தில் 18 பேரும் , கிழக்கு மாகாணத்தில் 47 பேரும், வட மாகாணத்தில் 20 பேரும், ஊவா மாகாணத்தில் 18பேரும், வடமேல் மாகாணத்தில் 10பேரும், மத்திய மாகாணத்தில் 38பேரும், வடமத்திய மாகாணத்தில் 10பேரும், சபரகமுவ மாகாணத்தில் 06பேரும், தென் மாகாணத்தில் 05 பேரும் மற்றும் அக்கரைப்பற்று மேலதிக மாகாண பணிப்பாளர் அலுவலகத்தில் 10 பேரும் என நிரந்தர நியமனம் பெற்றுள்ளனர்.
மேலும், வீதி நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு முகாமைத்துவப் பிரிவில் 10 பேரும், விசேட திட்டப் பிரிவில் 2 பேரும், ஒப்பந்த சேவைப் பிரிவில் 3 பேரும் நிரந்தர நியமனம் பெற்றுள்ளனர்.
நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம், பிரதி பணிப்பாளர் நாயகர்கள், மாகாண பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇!
![]()









