கீழ் மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்!

ரஜரட்ட மாபெரும் நீர்ப்பாசன கட்டமைப்பில் சேர்க்கப்படவுள்ள மற்றொரு விசேட நீர்த்தேக்கத் திட்டமான கீழ் மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை நேரில் பார்வையிடுவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 29.08.2026 அன்று விஜயம் செய்தார்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் பணிகள், பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் தொடங்கப்பட்டு, 2026 ஆம் ஆண்டிற்கென 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் எழுந்த சிக்கல்களைத் தீர்த்து கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன என்பதும், முற்றிலும் உள்நாட்டு நிதியில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் 2029 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மாவட்டத்தையும், வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தையும் இணைக்கும் வகையில், தந்திரிமலை பொகொடவில் மல்வத்து ஓயாவின் குறுக்கே கட்டப்படவுள்ள மேற்படி கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கமானது, 1,69,400 ஏக்கர் அடி நீர் கொள்ளளவைக் கொண்டிருப்பதுடன், இதன் கட்டுமானப் பணிகளின் பின்னர், ரஜரட்டவில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கமாகவும் வட மத்திய மாகாணத்தின் மிகப் பெரிய நீர்த்தேக்கமாகவும் இது அமையும்.

இத்திட்டத்தினூடாக அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு அளிப்பது, கீழ் மல்வத்து ஓயா பள்ளத்தாக்கில் கிராமப்புற அபிவிருத்தி மற்றும் விவசாயத்திற்கு நீர் வழங்குவது, தந்திரிமலை பகுதியில் புதிய அபிவிருத்தி பிரதேசமொன்றை உருவாக்குவது, நீர்மின்சாரம் உற்பத்தி செய்வது, வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் நன்னீர் மீன்வளத்தை மேம்படுத்துவது ஆகிய இலக்குகளை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள ‘யோத வாவி’ மற்றும் ‘அகித்தமுருப்பு வாவி’ ஆகியனவற்றின் கீழ் உள்ள பிரதேசத்தில் பெரும்போகத்தில் 40,000 ஏக்கர் நெல் பயிர்செய்யப்பட்டாலும், நீர் பற்றாக்குறையின் காரணமாக சிறுபோகத்தில் 10,000 ஏக்கர் மாத்திரமே பயிர்செய்யப்படுகின்றது.

எனவே, இந்த நீர்த்தேக்கம் கட்டப்படுவதால், சிறுபோகம் மற்றும் பெரும்போகம் ஆகிய இரண்டு பருவங்களிலும் 40,000 ஏக்கர் நெல் முழுவதையும் பயிர்ச்செய்ய முடியும்.

இதுதொடர்பில் திட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் திட்டத்தைச் செயல்படுத்தும்போது எழுந்த பிரச்சனைகள், சவால்கள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்ததுடன், மேற்படி கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தி மக்களுக்குப் பலன்களை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இத்திட்டத்தால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி முக்கிய கவனம் செலுத்தியதுடன், இவ்வாறான 315 குடும்பங்களுக்கு காணி, மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்கவும், இந்த காணிகளில் சூரிய சக்தியால் இயங்கும் நீர்ப்பாசனம் மூலம் நுண் விவசாய பயிற்செய்கையை மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

இத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி ஆராய்ந்ததுடன், 3.4 கிலோமீட்டர் நீளமுள்ள நீர்த்தேக்கத்தின் பிரதான அணை சுவரின் கட்டுமானப் பணிகள் சுமார் 60% நிறைவடைந்துள்ளதாகவும், தென்கரை மதகின் கட்டமைப்புப் பகுதிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மின் உற்பத்தி நிலையமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதோடு, இதற்கான அத்திவாரம் அமைத்தல் மற்றும் கருங்கற்பாறைகளை தகர்த்தல் போன்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளன எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், யானைகளுக்கான தடை வேலி அமைத்தல், சிறிய குளங்களைப் புதுப்பித்தல் மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகமொன்றை அமைத்தல் போன்ற பணிகளும் இதனிடையே மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்ஹ, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்ஹ, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, சுசந்த நவரத்ன, மகாவிலச்சிய பிரதேச சபையின் தலைவர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அப்பிரதேச அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிரதான திட்டப் பணிப்பாளர் அனுர நெலுகொல்ல உட்பட திட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects