பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும் புதிய திட்டத்தின் கீழ் பொலன்னறுவை டிப்போவில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மக்களின் அன்றாட வாழ்க்கையை இலகுவாக்கும் நோக்கில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும் புதிய வேலைத்திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட்டுள்ள பொலன்னறுவை டிப்போவின் தற்போதைய நிலைமை தொடர்பில் கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு விஜயம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, போக்குவரத்துத் துறையின் மனித வளத்தை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அத்துடன், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பானதும் ஒழுங்குமுறையானதுமான போக்குவரத்து வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் புதிய “சிசு செரிய” வாகன அனுமதிப்பத்திரங்கள் 4 வழங்கப்பட்டன.
அபிவிருத்தியடைந்த நாட்டின் போக்குவரத்து கட்டமைப்பு என்பது புதிய பேருந்துகள் அல்லது வீதிகளை அமைப்பது மட்டுமல்ல எனவும், தரமான சேவை, பொறுப்புணர்வு, மக்கள் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் மனித வளத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில், பொலன்னறுவை டிப்போவை நவீனமயமாக்குதல், பயிற்சி பெற்ற மற்றும் அனுமதிப்பத்திரம் பெற்ற சாரதிகளை உருவாக்குதல், மாணவர்களுக்கான “சிசு செரிய” சேவையை விரிவுபடுத்துதல் ஆகியவை மக்கள் மையப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவையை உருவாக்குவதற்கான முக்கிய நடவடிக்கைகளாக அமைந்துள்ளன.
இந்த நிகழ்வில் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ரத்னசிறி மற்றும் பத்மசிறி பண்டார, பொலன்னறுவை மாநகர மேயர் லலித் திஸ்ஸ குமார, பொலன்னறுவை பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட பிரதேச அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொலன்னறுவை டிப்போ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







