அகில இலங்கை திறந்த தேசிய பெட்மின்டன் சுற்றுப்போட்டியானது 24.01.2025 அன்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டு ஐந்து நாட்களாக போட்டிகள் இடம்பெற்று 27.01.2025 அன்று இறுதிப் போட்டிகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தின் உள்ளக அரங்கில் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது.
இலங்கை பெட்மின்டன் சங்கமும் கிழக்கு மாகாண பெட்மின்டன் சங்கமும் இணைந்து இந்த சுற்றுப்போட்டியை நடாத்தியிருந்ததுடன், இச் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை பெட்மின்டன் சம்மேளனத்தின் உப தலைவர் டினேஸ் ஐயவர்த்தன, சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்சயன் மற்றும் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.பிரகாஸ் ஆகிய இருவரும் கலந்து சிறப்பித்தனர்.
கிழக்கு மாகாண பெட்மின்டன் சங்கத்தின் தலைவர் எம்.எச்.எம்.மன்சூர் தலைமையில் இச்சுற்றுப் போட்டிகள் இடம் பெற்றிருந்தது.
ஐந்து தினங்களாக நடைபெற்ற திறந்த சுற்றுப்போட்டியில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான வீர, வீராங்கனைகள் பங்குபற்றியதுடன், இச் சுற்றுப் போட்டியில் திறந்த ஆண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் செனுக் சமர ரத்ன, ஆண்களுக்கான திறந்த இரட்டையர் ஆட்டத்தில் துலிப் பள்ளே குரு மற்றும் ஒசாமிக்க கருணாரத்ன, பெண்களுக்கான திறந்த ஒற்றையர் ஆட்டத்தில் ரஸ்மி பாக்கியா முதலிகே, பெண்களுக்கான திறந்த இரட்டையர் ஆட்டத்தில் ரஸ்மி பாக்கியா முதலிகே மற்றும் வரங்கனா ஜெயவர்த்தனா, இரட்டையருக்கான திறந்த கலப்பு போட்டியில் துலிப் பல்லே குரு மற்றும் பாஞ்சாலி அதிகாரி, 70 வயதிற்கு மேற்பட்ட ஆடவருக்கான போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த தங்கவேல் சந்திரசேகரம் ஆகியோரும் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










