மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி சமூக வலுவூட்டல் திட்டம் தொடர்பாக மாவட்ட மட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் நிகழ்வானது மாவட்ட அராங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 11.02.2024 அன்று இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, வைத்தியர் இளையதம்பி ஶ்ரீநாத், எஸ்.எம்.நழிம் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி சமூக வலுவூட்டல் தேசிய திட்டமானது மாவட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் இத்திட்டத்தினுடாக மாவட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்கு பிரதேச மட்டத்தில் சுய தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் போது சமூக வலுவூட்டலை நடைமுறைப்படுத்த வேண்டிய முறைமை பற்றியும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் தொடர்பாக சமுர்த்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அமிர்தகலாதேவி பாக்கியராஜாவினால் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
சமுர்த்தி சமூக வலுவூட்டல் திட்டமானது மூன்று நிதி மூலத்தின் மூலம் செயற்படுத்தப்படவுள்ளது.
மாவட்டத்தில் 79211 அஸ்வசும குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சரியான முறையில் பயனாளிகளை தெரிவு செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் இதன் போது விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட சமுர்த்த பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு, பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி திணைக்கள உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










