இரணை இலுப்பைக்குளம் அ.த.க. பாடசாலை ‘தரம் 1 சி’ ஆக தரம் உயர்த்தப்பட்ட அங்குரார்ப்பண நிகழ்வு!

Tamil
 – 
ta

இந்தப் பாடசாலையில் கல்விகற்று பல்கலைக்கழகத்துச் செல்லும் மாணவர்கள், இந்தக் கிராமத்தை அபிவிருத்தி செய்யவேண்டும். அதன் ஊடாகவே இந்தப் பிரதேசங்கள் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் எல்லையோர கிராமத்திலுள்ள இரணை இலுப்பைக்குளம் அ.த.க. பாடசாலை ‘தரம் 1 சி’ ஆக தரம் உயர்த்தப்பட்ட அங்குரார்ப்பண நிகழ்வு 19.02.2025 அன்று பாடசாலையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாடசாலையின் அதிபர் ந.கோபு தனது தலைமை உரையில், பாடசாலையின் தேவைப்பாடுகளை முன்வைத்ததுடன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 118 ஆண்டுகளின் பின்னர் கல்விப்பொதுத்தராதர உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு வாய்ப்புக்கள் கிடைத்துள்ளமையும் சுட்டிக்காட்டினார். அதேபோன்று தற்போது உயர்தர வகுப்பில் கற்கும் மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகுவார்கள். அவர்களை கௌரவிக்கும் நிகழ்வையும் இவ்வாறு அதிதிகளை அழைத்துச் செய்வோம் எனவும் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் பிரதம விருந்தினர் உரையாற்றிய ஆளுநர், மன்னார் மாவட்டச் செயலராக கடமையாற்றியதை நி;னைவுகூர்ந்தார். அத்துடன் அதிபரின் தூர நோக்கான சிந்தனையைப் பாராட்டினார். உயர்தர வகுப்பை ஆரம்பிப்பதுடன் நின்றுவிடாது அந்த மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவோம் என்ற அவரது இலக்கு வெற்றியடையவேண்டும் என வாழ்த்திய ஆளுநர், இவ்வாறு நேரிய சிந்தனையுடன் செயற்படும் அதிபர்கள், அதிகாரிகள் வடக்கில் மிகக் குறைவு எனவும் குறிப்பிட்டார்.

அதிகாரிகளின் எதிர்மறையான சிந்தனையும் எமது மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடையாமல் இருப்பதற்குக் காரணம் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா தலைமையிலான அரசாங்கம் கிராமங்களை அபிவிருத்தி செய்யவேண்டும் என்ற இலக்குடனேயே செயற்படுகின்றது எனத் தெரிவித்த ஆளுநர், இதைச் சாதகமாக நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இக் கிராமத்தை அபிவிருத்தி செய்யவேண்டியது அவசியம் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், ஒரு கிராமம் அபிவிருத்தியடையவேண்டுமாயின் அங்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படுவது அவசியமானது எனவும் குறிப்பிட்டார்.

இப் பகுதி விவசாயிகளின் தேவைகளையும், பாடசாலை மற்றும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் ஆகியனவற்றின் அபிவிருத்தி தொடர்பிலும் சிறப்புக் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், அந்தப் பகுதி விவசாயப் போதனாசிரியரின் செயற்பாடுகள் தொடர்பிலும் பாராட்டுத் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மடு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அ.கி.வொலன்ரைன் மற்றும் மடு பிரதேச செயலர் கீ.பீட் நிஜாகரன் ஆகியோரும் பங்கேற்றனர். பாடசாலைச் சமூகத்தால் ஆளுநருக்கு கௌரவமும் வழங்கப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects