ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 16.04.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கு அமைவாக அமைச்சரவை அங்கீகாரத்துடன் “நேர்மையான இலங்கை” எனும் தொனிப்பொருளில் இலங்கையின் ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் 2025 – 2029 இணை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படவுள்ள உள்ளக அலுவல்கள் பிரிவே மட்டக்களப்பு திராய்மடுவில் அமைந்துள்ள மாவட்ட செயலக கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை சமூகம் முழுவதும் பரவியுள்ள இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கும், ஊழல் குறிகாட்டிகளில் எமது நாட்டின் மோசமான தரநிலையினால் நாடு இழந்துள்ள பொருளாதார வாய்ப்புகளை மீண்டும் உருவாக்குவதற்கும் அரசாங்கம் முன்னெடுக்கும் பணிக்கான வலுவான அணுகுமுறையாக, ஊழலுக்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் வலுச் சேர்க்கும் என்பதுடன், சுதந்திரம் அடைந்து ஏழு தசாப்தங்களை கடந்துள்ள எமது நாடு அபிவிருத்தியடைந்த நாடாக மாறத் தவறியுள்ளதினைக் கருத்திற் கொண்டு, வலுவான உற்பத்திப் பொருளாதாரத்துடன் கூடிய முன்னேற்றகரமான, நவீன இலங்கை அரசைக் கட்டியெழுப்பும் பொறுப்பை இப் புதிய அரசாங்கம், நாட்டில் உள்ள ஊழலின் மூலங்களைக் கண்டறிந்து அவற்றை ஒழிக்கும் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது.
அனைவருக்கும் நியாயமானதும் சமமானதுமான நீதிக் கட்டமைப்பை நிறுவவும், சுயாதீனமாகவும் திறமையாகவும் நீதியை நிலைநாட்டுவதற்கும் அந்த சட்டச் செயற்பாட்டில் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்வதற்கும் சட்டத்தின் ஆட்சியை நிறுவுவது மிக முக்கியமானது. இந்த நோக்கத்திற்காக வலுவான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் அதே வேளையில், ஊழலை எதிர்த்துப் போராடுவதில் முன்னோடி நிறுவனமான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு செயல்திறன், இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதில் அரசாங்கத்தினால் எதிர்பார்க்கப்படும் செயல்திறனுடன் இணைந்து காணப்படுகின்றது.
“அழகான தீவு, மகிழ்ச்சி நிறைந்த மக்கள்” எனும் தொலை நோக்குடன் அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டத்தின் நெறிமுறையான குறிக்கோள்களை வெளிப்படைத்தன்மை, பொறுப்பு மற்றும் பொறுப்புக் கூறல் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னெடுப்பதற்காக பிரஜைகளின் நெறிமுறைகளை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக திகழ்வதனால், இந்த நோக்கங்களை அடைவதற்கே ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாவட்ட ரீதியாக அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயற்திறனுடன் திறம்பட செயற்படவுள்ளது.
அதன் ஒரு அங்கமாகவே மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட செயலாளர் சுதர்சனி ஸ்ரீகாந்தினை பணிப்பாளராக கொண்டு உள்ளக அலுவல்கள் பிரிவு செயற்படவுள்ளது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்சினி ஶ்ரீகாந்த், நவரூபரஞ்ஜனி முகுந்தன் (காணி), பிரதம கணக்காளர் ஆர்.காயத்திரி, மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு, உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன், மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர் ரீ.சுமன், மாவட்ட செயலக கணக்காளர் எம்.வினோத், மாவட்ட புள்ளி விபரவியலாளர் ரீ.ஜெய்த்தனன், மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணன், மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் பா.ஜெயகாந்தன், மாவட்ட ஊடகப் பிரிவின் பெறுப்பதிகாரி வ.ஜீவானந்தன் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் 2025 – 2029 இனுள் நிகழ்நிலையில் பிரவேசிக்க கூடிய வகையிலான QR குறியீடும் இதன் போது அறிமுகம் செய்துவைக்கப்பட்டதுடன், குறித்த விடயம் தொடர்பாக பொதுமக்களுக்கான இலகு வழிகாட்டல்களை மேற்கொள்ளும் வண்ணம் மாவட்ட செயலக முன்வாயிலில் நிறுவப்பட்டுள்ள விளம்பர பலகையும் அரசாங்க அதிபரினால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










