2024 ஆம் ஆண்டை மீட்சிக்கான ஆண்டு என அடையாளப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சுஜிதா ஜெகஜீவன், பணவீக்கமானது இவ்வருடம் நேர்மறையாக உயர்வடைந்து, நடுத்தரகாலத்தில் 5 சதவீதமாகப் பதிவாகும் என எதிர்வுகூறியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியினால் அண்மையில் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையின் பிரகாரம் நாட்டின் பொருளாதார நிலைவரம் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் 17.05.2025 அன்று மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் பங்கேற்று தெளிவுபடுத்துகையிலேயே சுஜிதா ஜெகஜீவன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
பொருளாதார மதிப்பீட்டு அறிக்கை என்பது 2023 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச்சட்டத்தின் 80 (3) ஆம் பிரிவின் பிரகாரம் கட்டாயமாக வெளியிடப்படவேண்டியதொரு ஆவணமாகும்.
இவ்வறிக்கையின் பிரகாரம் நாட்டின் பொருளாதாரமானது இரு ஆண்டுகளுக்கு முன்னர் முகங்கொடுத்த மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து 2024 ஆம் ஆண்டு வலுவான மீட்சியடைந்தது.
அம்மீட்சியை நோக்கிய பாதை மிகக்கடினமானதாக இருப்பினும், கடன்களை மீளச்செலுத்தமுடியாமல் வங்குரோத்து நிலையை அடைந்த ஏனைய நாடுகளின் மீட்சிக்காலத்துடன் ஒப்பிடுகையில் இலங்கை மிகவேகமாக மீட்சியைப் பதிவுசெய்தது.
அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தினால் வலியுறுத்தப்பட்ட மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் அரசியல் ஸ்திரத்தன்மை மீளுறுதிப்பட்டது. அதுமாத்திரமன்றி குறிப்பாக வெளியகக் கடன்மறுசீரமைப்பு செயன்முறை முழுமையாகப் பூர்த்தியடையும் தருவாயை எட்டியது. எனவே 2024 ஆம் ஆண்டை ‘மீட்சிக்கான ஆண்டு என அடையாளப்படுத்தமுடியும்.
அதன்படி மத்திய வங்கியின் பிரதான கடப்பாடுகளில் ஒன்றான விலை உறுதிப்பாட்டைப் பொறுத்தமட்டில், 2024 ஆம் ஆண்டு முழுவதும் படிப்படியான வீழ்ச்சியைப் பதிவுசெய்த பணவீக்கம், ஆண்டின் இறுதியில் பணச்சுருக்கத்தைப் பதிவுசெய்தது.
அதேவேளை தொடர்ச்சியாக இரு ஆண்டுகள் பொருளாதாரச்சுருக்கம் பதிவாகியிருந்த நிலையில், கடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்தது.
அத்தோடு 2023 ஆம் ஆண்டு 4.4 சதவீதமாகப் பதிவாகியிருந்த வேலைவாய்ப்பின்மை வீதம், 2024 ஆம் ஆண்டு 0.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.
மேலும் பணவீக்கமானது இவ்வருடம் நேர்மறையாக உயர்வடைந்து, நடுத்தரகாலத்தில் எதிர்பார்க்கப்படும் 5 சதவீத மட்டத்தைப் பதிவுசெய்து, ஸ்திரமடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










