மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டத்தின் கீழ் 4 மாதிரிக் கிராமங்களை உருவாக்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் குறித்த திட்டம் தொடர்பாக உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் செயவர்வொன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற குறித்த செயலமர்வினை மாவட்ட போதைப்பொருள் முத்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் மாவட்ட இணைப்பாளர் ப.தினேஸின் ஏற்பாட்டில் 23.06.2025 அன்று இடம்பெற்றது.
மது சாரத்தினை அருந்துவதால் ஏற்படும் உடல் நல குறைபாடு மற்றும் குடும்ப நல பாதிப்பு ஆகியவற்றினால் ஏற்படும் பாதிப்புக்கள், சமூகப் பாதிப்புக்கள், பொருளாதார பிரச்சனை, சிறுவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து பாதுகாத்தல், போதைப்பொருள் விற்பனை விளம்பர யுக்திகள் என்பன தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
குறித்த செயலமர்வினை மாவட்ட செயலகத்துடன் இணைந்து மது சாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் ஏற்பாடு செய்திருந்ததுடன், செயலமர்வின் வளவாளராக மது சாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் சிரேஸ்ட நிகழ்ச்சித் திட்ட அதிகாரி நிதர்சனா ஆகியோர் கலந்து கொண்டு வளவாண்மை மேற்கொண்டனர்.
இச் செயலமர்வில் மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பிராந்திய சுகாதார பணிமனையின் அதிகாரிகள், மருத்துவ மாதுக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு – வவுணதீவு, கோறளைப்பற்று – வாழைச்சேனை, பட்டிப்பளை – கொக்கட்டிச்சோலை, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 கிராமங்களில் போதைப்பொருள் அற்ற மாதிரிக் கிராமத்தினை உருவாக்கும் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










