அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறைப்பது தொடர்பில் இன்று (08.07.2025) சாதகமான பதில்கள் எதிர்பார்க்கப்படுவதாகப் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஊடகங்களுக்கு 07.07.2025 அன்று கருத்துரைக்கும் போதே இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் நம்பிக்கை மிகுந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை உட்பட 50 இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் 44 சதவீதத்திற்கும் அதிக வரி விதிக்கப்பட்டது.
இந்த வரிக் கொள்கை தொடர்பாக அமெரிக்க நீதித்துறை அமைப்பின் அழுத்தம் மற்றும் பல நாடுகளின் எதிர்ப்பு காரணமாக, ஏபரல் 9 ஆம் திகதி முதல் 90 நாட்களுக்கு புதிய வரிக்கொள்கை அமுலாக்கம் இடைநிறுத்தப்பட்டது.
இந் நிலையிலேயே, இலங்கைக்கு அமெரிக்காவிடமிருந்து வரி நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகப் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வரி தொடர்பில் கலந்துரையாடுவதற்காகக் கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இதன்படி, இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
இந் நிலையில், அமெரிக்காவின் இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் எனவும், இலங்கைக்கு வரி நிவாரணம் கிடைக்கும் எனவும் எதிர்பார்ப்பதாகப் பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










