அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இறக்குமதி வரிக்குறைப்பு தொடர்பான விவாதம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், இந்த விடயம் தொடர்பில் மெய்நிகர் சந்திப்பொன்றும் நடைபெற்றது.
இதன்போது, விரிவான திட்டங்கள் குறித்து ஆராய்ந்ததாகத் தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டுப் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வரிகளை 30 சதவீதமாகக் குறைக்க முடிந்துள்ளது.
எனினும், அதனை மேலும் குறைப்பதற்காக, அமெரிக்க நலன்களுக்கு இடமளித்து, வர்த்தக இடைவெளியைக் குறைக்க இலங்கையும் சில சமரசங்களைச் செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க பொருட்களுக்கான சுங்க வரிகளை நீக்குதல், இலங்கைக்கான இறக்குமதிகள் மற்றும் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து இதுவரை ஆராயப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தவிடயத்தில், சீனாவுக்கு எதிராக அமெரிக்கா சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கோருகிறதா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் அனில் ஜயந்த, இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் இறையாண்மை உள்ளது.
எந்த நாடும் அதனை சமரசம் செய்யமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










