சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சியாக, மேலும் 40 நாடுகளைச் சேர்ந்த
சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த இலங்கை
அரசு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
‘Hotel Show Colombo 2025’ கண்காட்சி இன்று (25.07.2025) கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்விலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்,
“கடந்த காலத்தில், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விசா கட்டணமின்றி இலங்கைக்கு வரும் வாய்ப்பை வழங்கினோம். இங்கிலாந்து உள்ளிட்ட மேலும் 40 நாடுகளுக்கு இலவச விசா வசதியை வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டவுடன், மொத்தம் 47 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா கட்டணமின்றி இலங்கைக்கு வர அனுமதிக்கப்படுவர். இந்தத் தீர்மானத்தால், அரசு திறைசேரி ஆண்டுக்கு 66 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழக்கும். இந்த நேரடி வருவாய் இழப்பு இருந்தாலும், சுற்றுலாத் துறையின் வளர்ச்சியின் மூலம் மறைமுகமாக நாட்டிற்கு அதிக வருமானம் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். எனவே, இந்த வருமானத்தை அதிகரிக்கும் பொறுப்பு, சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள உங்களிடம் உள்ளது,” என்றார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










