பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தெரிவுசெய்யப்பட்டார்.
வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய முன்னாள் பிரதியமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து குழுவின் தலைவர் பதவி வெற்றிடமாகியது. இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க நியமிக்கப்பட்டார். அவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர் ருவன் ரணசிங்க முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா வழிமொழிந்தார்.
புதிய தலைவர் முன்னிலையில் கருத்துத் தெரிவித்த குழுவின் உறுப்பினர்கள், வழிவகைகள் பற்றிய குழுவின் நோக்கத்தைச் சரியாகக் கண்டறிந்து செயல்படுவதற்கு கட்சிபேதமின்றி ஒத்துழைப்பை வழங்குவதாகக் குறிப்பிட்டனர். அதன்படி, எதிர்காலத்தில் கலந்துரையாடப்பட வேண்டிய பிரச்சினைகள் மற்றும் அழைக்கப்பட வேண்டிய நிறுவனங்கள் தொடர்பில் குழு இணக்கப்பாட்டுக்கு வந்தது.
இக்கூட்டத்தில், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி அஜித் பீ.பெரேரா, எரங்க வீரரத்ன, அசோக சபுமல் ரன்வல, கே.சுஜித் சஞ்சய பெரேரா, சட்டத்தரணிகளான நிலந்தி கொட்டஹச்சி, ருவன் மாபலகம, ருவன் ரணசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










