மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில், திராய்மடு பிரதேசத்தில் அமைந்துள்ள புதிய மாவட்ட செயலக வளாகத்தில் அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
அதன் அடிப்படையில், மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் இயங்கி வந்த மாவட்ட செயலகமானது 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து திராய்மடு பிரதேசத்தில் உள்ள நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட கட்டடத்தில் இயங்கி வருகின்றது.
இந் நிலையில், பனை மரங்களால் நிறைந்து காணப்படும் திராய்மடு பிரதேசத்தில், மாவட்ட செயலக கட்டடத் தொகுதியை சுற்றிவரும் வெற்று நிலப் பரப்பில் ஆங்காங்கே பனை மரங்கள் காணப்பட்ட போதிலும், மீதமுள்ள பரந்து காணப்படும் வெற்று நிலப்பரப்பை பயனுள்ளதாக உபயோகிக்கும் நோக்கில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் தலைமையில், மேலதிக மாவட்ட செயலாளர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த்தின் வழிகாட்டுதலின் கீழ் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்பிக்கப்பட்டது.
இதற்காக மாவட்ட செயலகத்தில் இயங்கி வரும் ஒவ்வொரு அரசாங்க திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் மட்டக்களப்பு மாவட்ட பிரிவு கிளைகளுக்கு நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டு, அவற்றில் பணியாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது பணிக்கு மேலதிகமாக பயனுள்ள பயன்தரும் மரங்களை நட்டு, அவற்றை பராமரித்து அதன் மூலம் பயன்பெறும் நோக்கில் செயற்பட்டு வருகிறார்கள்.
அதன் ஒரு அங்கமாக 20.08.2025 அன்று மாவட்ட செயலகத்தில் இயங்கி வரும் சகல அரசாங்க திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் பிரிவுப் பதவி நிலை உத்தியோகத்தர்களின் தலைமையில் ஒவ்வொரு கிளைகளும் தமக்காக வழங்கப்பட்ட நிலப்பரப்பை சுத்தம் செய்தல், பண்படுத்துதல், மரம் நடுதல், அழகுபடுத்துதல், நீர் பாய்ச்சுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.
அதற்கிணங்க தென்னை, பலா, முந்திரிகை, ஜேம், மதுரம், வேம்பு போன்ற நீண்ட கால பலன்தரும் மரங்களும் வாழை, அன்னமின்னா, மாதுளை, முருங்கை, வெண்டி, கத்தரி போன்ற குறுங்காலத்தில் பயன் தருபவைகள் நடப்பட்டதுடன், இச்செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










