வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் கீழ், வடக்கின் முதல் விதைத் தேங்காய் உற்பத்தி அலகு 02.08.2025 அன்று பளை நகரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த திட்டம் இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டுத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளை வடக்கு தெங்கு முக்கோணமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் கீழ், 2025 ஆம் ஆண்டுக்குள் வட மாகாணத்தில் 16,000 ஏக்கர் தேங்காய் பயிரிட எதிர்பார்க்கப்படுகிறது. 2025 முதல் 2027 வரையிலான 03 ஆண்டுகளில் இது 40,000 ஏக்கராக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விதை தேங்காய் மரக்கன்றையும் நட்டு, உற்பத்தி அலகைத் திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், மற்றும் தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாகவுள்ள பகுதியில் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையால் நடத்தப்படும் தெங்கு தொடர்பான கண்காட்சியையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










