பொலிஸாரின் நடவடிக்கைகள், சட்ட விவகாரங்கள் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய விடயங்கள் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடுவது குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான வெளியீடுகளுக்கு ஊடகங்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற வழக்குகள், புகைப்படம் அல்லது காணொளி எடுப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ள விசாரணைகள் அல்லது பொலிஸாரின் நடவடிக்கைகளை புகைப்படம் அல்லது காணொளி எடுத்து ஊடகங்களில் வெளியிட தடைசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறான விடயங்களை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைத்து ஊடகங்களில் வெளியிடவும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தடைசெய்யப்பட்ட புகைப்படங்கள் அல்லது காணொளிகளை ஊடகங்களில் வெளியிடுவதால் பொலிஸாரின் விசாரணைகளில் பாதிப்பு ஏற்படலாம் அல்லது குற்றங்கள் அதிகரிக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் புகைப்படங்கள் அல்லது காணொளிகளை மாத்திரமே ஊடகங்களில் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே வேளை, பொலிஸாரின் அனுமதியின்றி தடைசெய்யப்பட்ட புகைப்படங்கள் அல்லது காணொளிகளை ஊடகங்களில் வெளியிட தடைசெய்யப்பட்டுள்ளது.
சரிபார்க்கப்படாத , தடைசெய்யப்பட்ட அல்லது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட புகைப்படங்கள் அல்லது காணொளிகளை ஊடகங்களில் வெளியிட்டால் அந்தந்த ஊடகங்களின் தலைவர்கள் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










