பயணிகள் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறியும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட நடமாடும் பரிசோதனைப் பேருந்து ஒன்றைத் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இப் புதிய முன்முயற்சி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நடமாடும் பிரிவு, நாடு முழுவதும் உள்ள பயணிகள் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு திடீர் சோதனைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடமையில் இருக்கும்போது போக்குவரத்து ஊழியர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்தியுள்ளனரா என்பதைக் கண்டறிய இப் பரிசோதனைகள் உதவும்.
இந்தப் பரிசோதனைத் திட்டத்தின் முதல் கட்டம் பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மீது கவனம் செலுத்தும் என்றும், பின்னர் இந்தப் பரிசோதனைத் திட்டத்தை மற்ற வகை வாகனங்களின் ஓட்டுநர்களுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் யூ.ஜி.சி. பெரேரா தெரிவித்தார்.
ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களில் கணிசமானோர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதாகவும், இத்தகைய நபர்களின் அலட்சியமான நடத்தை காரணமாகவே பயணிகள் பேருந்து விபத்துகளில் கிட்டத்தட்ட 53 சதவீதம் ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.
தொழில்சார் தரங்கள் மீட்டெடுக்கப்படாவிட்டால், பேருந்துத் தொழில் சரிவை நோக்கிச் செல்லும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
மாகும்புர நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள நடமாடும் பேருந்தில், ஓட்டுநர்கள் தங்கள் வேலையைத் தொடங்கும் முன்னர் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிசோதனை செயல்முறை இரகசியத்தன்மையை உறுதிசெய்வதுடன் இலவசமாக வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










