கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு இணையாக, நாட்டின் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கும், தரமான பயிற்சி நிறுவனங்களைப் பலப்படுத்துவதற்கும் அதிகபட்சக் கவனம் செலுத்தப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) 27.01.2026 அன்று நடைபெற்ற, தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் வருடாந்த டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் தொழிலாளர் சந்தைக்குத் தேவையான தகுதிவாய்ந்த தொழில்வல்லுநர்களை உருவாக்கும் நோக்கில், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நாடளாவிய ரீதியிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகள் ஊடாக NVQ 5 மற்றும் NVQ 6 மட்டங்களைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ்கள் இதன்போது வழங்கப்பட்டன.
நிகழ்வில் பிரதமர் மேலும் உரையாற்றுகையில்,
இலங்கையின் தொழில்நுட்பக் கல்வியானது ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது. இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்காகத் தொழில்நுட்பக் கல்லூரி வலையமைப்பு ஆற்றிவரும் பணி பாராட்டுக்குரியது.
உலகம் மாறிவரும் வேகத்திற்கு ஏற்பத் தோன்றும் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ள வேண்டுமாயின், நமது திறன்களைத் தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய விடயங்களைக் கற்றுக்கொள்வதற்கான ஆர்வத்தையும் தேவையையும் ஒருபோதும் கைவிடக்கூடாது. ஒரு தொழிற்பயிற்சி நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் மிக முக்கியமான கொடை ‘எவ்வாறு கற்றுக்கொள்வது’ என்பதைக் கற்றுக்கொள்வதேயாகும்.
நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்குத் தலைமை தாங்கும் பங்குதாரர்களாக, இன்று டிப்ளோமா சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் நீங்கள், நாட்டிற்கும் உலகிற்கும் பயனுள்ள பிரஜைகளாகத் திகழ்வீர்கள் என நான் நம்புகிறேன்” எனப் பிரதமர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி, தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி பி. பாபு உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










