இலங்கையின் சுற்றுலாத்துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், வான்வழிச் சாகச விளையாட்டான ‘ஸ்கைடைவிங்’ (Skydiving) நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாதுகாப்பு அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்த (ஓய்வு) தலைமையில் 05.02.2026 அன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
இதில் ‘ஸ்கைடைவ் ஸ்ரீலங்கா’ (Skydive Sri Lanka) அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, இலங்கையில் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்த விரிவான விளக்கக்காட்சியை வழங்கினர்.
இலங்கையை ஒரு சாகசச் சுற்றுலா மையமாக சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த இது உதவும்.
புதிய வகை சுற்றுலா ஈர்ப்புகள் மூலம் நாட்டுக்கு அதிக அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தர முடியும்.
இத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், பின்வரும் முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஸ்கைடைவிங் மேற்கொள்பவர்களின் பாதுகாப்பு குறித்த சர்வதேச தரத்திலான விதிமுறைகளை உருவாக்குதல்.
வான்வெளிப் பயன்பாடு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து விதிகளில் உள்ள தடைகளைக் கண்டறிந்து சரிசெய்தல்.
இதற்கான இடங்களைத் தேர்வு செய்தல் மற்றும் வானிலை உள்ளிட்ட பிற சவால்களை ஆய்வு செய்தல்.
இத்திட்டத்தின் ஒட்டுமொத்த சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை, சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபை , வெளிவிவகார அமைச்சு, மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

![]()










