கடந்த சில தினங்களாக நிலவிய மழையுடனான வானிலை குறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் அனைத்து பிரதான ஆறுகளின் நீர்மட்டமும் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக நீர்ப்பாசனத் துறையின் நீரியல் மற்றும் அனர்த்த மேலாண்மைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (23-02-2026) நண்பகல் 12.30 மணி நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முக்கிய விபரங்கள் வருமாறு:
திணைக்களத்தினால் கண்காணிக்கப்படும் அனைத்துப் பிரதான ஆறுகளின் நீர்மட்டமும் தற்போது “சாதாரண” மட்டத்திலேயே காணப்படுகின்றன.
குறிப்பாக:
களனி கங்கை: நாகலகம் வீதி, ஹங்வெல்ல மற்றும் கிதுல்கல ஆகிய பகுதிகளில் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்திற்கும் குறைவாகவே காணப்படுகிறது.
களு கங்கை: இரத்தினபுரி மற்றும் புடுபாவுல பகுதிகளில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.
ஜின் கங்கை மற்றும் நில்வலா கங்கை: பத்தேகம, தவலம மற்றும் தெல்கஹகொட பகுதிகளில் வெள்ள அபாயம் எதுவுமில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மகாவலி கங்கை: பேராதனை மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளில் நீர்மட்டம் வழமையான நிலையில் உள்ளது.
இன்று காலை முதல் நண்பகல் 12:00 மணி வரையிலான காலப்பகுதியில், பெரும்பாலான ஆறுகளை அண்டிய பகுதிகளில் மழைவீழ்ச்சிப் பதிவு செய்யப்படவில்லை (0.0 mm). எனினும், பதுலு ஓயாவை அண்டிய தல்தென பகுதியில் மாத்திரம் 0.3 மி.மீ என்ற மிகக் குறைந்த அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
தற்போது வெள்ள அபாயம் நீங்கியுள்ள போதிலும், ஆறுகளை அண்டிய தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வானிலை மாற்றங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










