மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் குழுக் கூட்டமானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 25.02.2026 அன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான கருத்திட்டங்கள் குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிரான் பாலம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு குறித்த பாலத்தினை நிர்மானிப்பது தொடர்பாகவும், முந்தானையாறு திட்டம் தொடர்பாகவும் மாவட்டத்தில் நிறைவுறாது காணப்படும் திட்டங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.
இதன் போது அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி,
“உயர் அதிகாரிகளே என்னுடன் கலந்துரையாடுங்கள் மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு கலந்துரையாடலை மேற்கொள்ளுங்கள், அரசியல் அழுத்தங்கள் எதுவும் இன்றி மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டி மக்கள் சேவையை மேற்கொள்ளுங்கள்” என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும் இம்மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள், விவசாயம், நீர்ப்பாசனம், சுகாதாரம், சுற்றாடல், வீதிகள், பாலங்கள் அமைத்தல், யானை வேலி அமைத்தல், வீதி சமிஞ்சை விளக்குகள், காணி பிரச்சினைகள், கழிவு முகாமைத்தும், ஆளணியினர் பற்றாக்குறை, குடிநீர் வழங்கல், கிறவல் அகழ்வு உட்பட மேலும் பல திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண உயர் அதிகாரிகள், மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள், செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் மாவட்டத்தில் கிறவல் மற்றும் மண் அகழ்வுகள் மேற்கொள்ளும் பிரதேசத்தை முறையாக அடையாளம் கண்டு அவற்றிற்கு அனுமதி வழங்க வேண்டுமெனவும், சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து மண்வளம் மற்றும் சுழலை பாதுகாக்க வேண்டும் எனவும் துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சரினால் பணிப்புரை விடுக்கப்பட்டதுடன் இதனை தடுப்பதற்கு உயர் மட்ட குழு ஒன்றை அமைப்பதற்கும் பணிப்புரை விடுக்கப்பட்டது.
கடந்த மழை வெள்ளத்தினால் மாவட்டத்தில் அறுவடை மேற்கொண்டு நெல்லினை உலர விட முடியாது விவசாயிகள் பாதிக்கப்பட்டமை தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதனை முன்னிட்டு நெல் உலர்த்திகளை கொள்வனவு செய்தல் தொடர்பாகவும், அதிகரித்து வரும் யானை மனித மோதலை தவிர்ப்பதற்கு தேவையாக நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சரினால் உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










