மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.
திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான தரப்படுத்தப்பட்ட மக்காச்சோளம் கிடைக்காமையினால் கடந்த சில மாதங்களாக உற்பத்திப் பணிகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. இதனால், பயனாளிகளுக்கான விநியோகமும் நாடு முழுவதும் சீரற்ற நிலையில் காணப்பட்டது.
வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவின் நேரடித் தலையீட்டின் கீழ், அமைச்சரவை அங்கீகாரத்துடன் தரப்படுத்தப்பட்ட மக்காச்சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அரச வர்த்தகப் பல்வகை கூட்டுத்தாபனத்துடன் அண்மையில் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.
தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்காக தற்போது 24 மணிநேரமும் உற்பத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க குறிப்பிட்டார்.
இந்த மாத இறுதிக்குள் திரிபோஷா கிடைக்காத அனைத்து பயனாளிகளுக்கும் விநியோகிக்கும் வகையில், சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் ஊடாக நாடளாவிய ரீதியில் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










