விவசாய அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உர இறக்குமதி நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளை சந்தித்தார் ஜனாதிபதி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டினதும் மக்களினதும் உணவுப் பாதுகாப்பிற்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவத்தை அளித்துள்ளதாகவும், அதற்கமைய,  சிறு  போகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை எவ்விதத் தடையுமின்றி வழங்குவதை உறுதிசெய்யும் வகையில், சந்தையில் போதுமான உரக் கையிருப்புகளைப் பேணுவதற்கு விவசாய அமைச்சு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.

விவசாய அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உர இறக்குமதி நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடன் இன்று (24.03.2026) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக விநியோகச் சங்கிலிகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளுக்கு மத்தியில், இம்முறை சிறு போகத்தில் நெற்செய்கை மற்றும் ஏனைய பயிர்களுக்குத் தேவையான உரங்களைச் சந்தையில் போதுமான அளவு கையிருப்பில் வைத்திருப்பதற்கும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

 2026  சிறு போகத்தில்  5.5 இலட்சம் ஹெக்டெயார் நிலப்பரப்பில் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. நெற்செய்கைக்கு 83,000 மெட்ரிக் தொன் யூரியாவும், ஏனைய பயிர்களுக்கு 42,000 மெட்ரிக் தொன் யூரியாவும் என மொத்தம் 125,000 மெட்ரிக் தொன் யூரியா தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

சிறு போகம் ஆரம்பிக்கப்பட்ட மார்ச் 1ஆம் திகதி நிலவரப்படி  நிறுவனங்களிடம் 95,000 மெட்ரிக் தொன் யூரியாவும் விநியோகஸ்தர்களிடம் 7 000 மெட்ரிக் தொன் யூரியாவும் என மொத்தமாக 102 000 மெட்ரிக் தொன் கையிருப்பில் இருந்தது. எனினும், கடந்த இரு வாரங்களில் மட்டும் 27,000 மெட்ரிக் தொன் உரம்  விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மார்ச் 17ஆம் திகதி நிலவரப்படி நிறுவனங்களிடம்  68,000 மெட்ரிக் தொன் யூரியா மட்டுமே கையிருப்பில் உள்ளதாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மார்ச் மாதத்தில் சுமார்11 00 மெட்ரிக் தொன் யூரியா விநியோகிக்கப்பட இருந்தாலும்  உரத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற கருத்தின் காரணமாக உரம்  சேமித்து வைக்கப்பட்டதால்  27 000 மெட்ரிக் தொன் விற்பனை  செய்யப்பட்டுள்ளது.

மேலும்  77,000 மெட்ரிக் தொன் யூரியா கொள்வனவு செய்வதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 37 000 மெட்ரிக்  தொன்  மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வர வேண்டியிருந்ததால்  அது  தொடர்பில் நிச்சயமற்ற தன்மை நிலவினாலும், எஞ்சிய  40 000 மெட்ரிக் தொன்னில் 21,000 மெட்ரிக் தொன் உரம் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் இலங்கைக்கு வரவுள்ளதாக  சுட்டிக்காட்டப்பட்டது.

தேவையான எஞ்சிய உரங்களை இறக்குமதி செய்வதற்கான திட்டங்கள் மற்றும் அடுத்த 03 மாதங்களுக்குப் போதுமான உரக் கையிருப்புகளை முறையான முகாமைத்துவத்துடன் பேணுவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது உர நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய பங்களிப்பு குறித்தும் ஜனாதிபதி ஆராய்ந்தார்.

விவசாயத்திற்குத் தேவையான உரங்களைத் தடையின்றி வழங்குவது உணவுப் பாதுகாப்பிற்கு அவசியமானது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நெல் மற்றும் மரக்கறிகள் போன்ற குறுகிய காலப் பயிர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் நிறுவனங்களுக்குச் சேர வேண்டிய நிலுவைப் பணம் முறையாகக் கிடைக்காததால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து உர நிறுவனப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் முறையிட்டனர். அந்த நிலுவைகளை துரிதமாக செலுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான உரக் கையிருப்புகளைச் சந்தையில் பேணுவதற்கு விவசாய அமைச்சிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க உர நிறுவனங்கள் ஜனாதிபதியிடம் இணக்கம் தெரிவித்தன.

மேலும், எதிர்காலத்தில் இத்தகைய நெருக்கடி நிலைமைகளை எதிர்கொள்ளும் வகையில் திட்டங்களைத் தயாரிப்பதற்கும், அதில் அரசாங்கம், உர நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய முத்தரப்பினரும் சில அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அதற்காக உர நிறுவனங்கள் வழங்கும் ஒத்துழைப்பிற்கு ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்தார்.

பாதுகாப்பு உரக் கையிருப்புகளைப் பேணுவதற்கு கொழும்பு நகரை அண்மித்த களஞ்சிய வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் உர இறக்குமதிக்கான கடன் வசதிகளை வழங்குதல் போன்ற  உணவு பாதுகாப்பு குழுவின் கடந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த மற்றும் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டீ.பீ. விக்ரமசிங்க, பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, இலங்கை தேயிலை சபையின் தலைவர் ஆர்கே. ஒபேசேகர, சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமல் உடவத்த உள்ளிட்ட அதிகாரிகள்  விவசாய அமைச்சின் அதிகாரிகள், உர நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects