நாட்டின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை புதுப்பித்து அழகுபடுத்தும் நோக்கில் ஒரு புதிய திட்டம் இன்று (09.04.2026) ஆரம்பிக்கப்படவுள்ளது.
“இந்த நாட்டை அழகாக காண வேண்டும் என்றால், அது அழகாக தோன்ற வேண்டும்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு, கோட்டை புகையிரத நிலையத்தை 15 மாதங்களுக்குள் புதிய வடிவில் உருவாக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டு மாதிரி படங்களை பதிவேற்றியுள்ளார்.
இந்த திட்டம் ஒரு சாதாரண மேம்பாட்டு முயற்சி அல்ல, இது ஒரு இலக்கு மையப்படுத்திய செயல் திட்டமாக வர்ணிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக பூர்த்தி செய்யப்படாமல் இருந்த பகுதிகளை முழுமையாக்கி, மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற ஒரு நவீன மற்றும் அழகான நிலையமாக மாற்றுவது இதன் நோக்கமாகும்.
மேலும், பொதுமக்களுக்கு வசதியான, சீரமைக்கப்பட்ட மற்றும் கண்ணுக்கு இனிமையான சூழலை வழங்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்படவுள்ளது.
“பூர்த்தி செய்யப்படாத கோட்டையை, முழுமையான கோட்டையாக மாற்றும் முயற்சி” என இந்தத் திட்டம் விவரிக்கப்படுகிறது.
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட கொழும்பு புறக்கோட்டை பிரதான பேருத்து நிலையம் 08.04.2026 அன்று பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட நிலையில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் இன்றையதினம் புதுப்பித்து அழகுபடுத்தும் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந் நிலையில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் புதிய அடையாளத்துடன் மக்கள் முன் தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










