தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்காக கொழும்பில் இருந்து தமது ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக, இன்றைய தினத்திலும் (13.04.2026) தேவைக்கேற்ப பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 12.04.2026 அன்று மாலை முதல் குறைவடைந்துள்ளதாக அந்த சபையின் தலைவர் சஞ்சீவ கனகரத்ன தெரிவித்தார்.
கடந்த சில நாட்களில் வழமையான பேருந்து அட்டவணைக்கு மேலதிகமாக 1,500 பேருந்து கள் கொழும்பிலிருந்து இயக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்தன.
இன்றைய தினமும் பயணிகளின் வருகையைப் பொறுத்து தேவையான அளவு பேருந்துகள் இயக்கப்படும்.
இதே வேளை நாளை (14.04.2026) உறவினர் வீடுகளுக்குச் செல்லும் மக்களுக்காக, பிராந்திய போக்குவரத்து சபைகள் ஊடாகத் தேவையான பேருந்து வசதிகள் செய்து தரப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பயணிகளின் தேவைக்கு ஏற்ப இன்றும் நாளையும் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்றும், நாளையும் புகையிரத சேவைகள் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று மாலை முதல் கொழும்பிலிருந்து வெளியேறும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக புகையிரத போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்தார்.
மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்கு மத்தியிலும், கொழும்பிலிருந்து இயங்கும் அனைத்து கடுகதி புகையிரதங்கள், தபால் புகையிரதங்கள் மற்றும் நகராந்திர கடுகதி புகையிரதங்கள் வழமை போல் இயங்கும்.
பொல்கஹவெல, கொஸ்கம, அவிசாவளை, புத்தளம் மற்றும் காலியிலிருந்து அத்தியாவசிய பணிகளுக்காக கொழும்பு வருவோருக்காக புகையிரதங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து அந்தந்தப் பகுதிகளுக்கு இந்த புகையிரதங்கள் மீண்டும் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இச் செய்திaயினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










