செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சின்னத்தளவாய் கிராமத்தில் அறநெறி பாடசாலை மாணவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களுக்கான சித்திரை வருடப்பிறப்புக் கொண்டாட்டம் 2026 நிகழ்வானது சிவத்தொண்டர் திருக்கூட அமைப்பு மற்றும் 93 நண்பர்கள் அமைப்பின் ஒழுங்கமைப்பில் 26.04.2026 அன்று பவித்திர விநாயகர் ஆலய வளாகத்தில் காலை 7:30 மணிக்கு கோயில் பூசையுடன் ஆரம்பமாகி நடைபெற்றது.
இந் நிகழ்விற்கான நிதி அனுசரணையை சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை வம்சாவளியினரான செ.யோகராஜா குடும்பத்தினர் மற்றும் கலாநிதி. யோ.இந்திரயோகன் குடும்பத்தினர் வழங்கி இருந்தனர்.
அத்துடன் குறித்த ஆலய நிர்வாகத்தினரின் வேண்டு கோளுக்கு இணங்க சிங்கப்பூரில் வசிக்கும் 93′ நண்பர்கள் அமைப்பின் உறுப்பினரும் பொறியியலாளருமான ச.ஞானாகரனினால் ஆலயத்திற்கு தூண்டாமணி விளக்கு ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது மாணவர்களுக்கான மிட்டாய் ஓட்டம், சமநிலை ஓட்டம், தடை தாண்டல் ஓட்டம், ஆண்களுக்கான பந்து மாற்றம், பெண்களுக்கான கொடியைச் சுற்றி ஓடுதல், சிறுவர்களுக்கான வினோத உடைப்போட்டி, பெரியவர்களுக்கான கிடுகு இழைத்தல், முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல் போன்ற பல விளையாட்டுக்களும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது.
கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் முத்துக்குமாரன் சுகிர்தரன், அம்கோர் தன்னார்வத் தொண்டு நிறுவன தேசியப் பணிப்பாளர் பரமசிவம் முரளிதரன், மண்முனை தென்மேற்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சீனித்தம்பி குகன், மட்டக்களப்பு மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கி.குணநாயகம், மட்டக்களப்பு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி அமைப்பு இணைப்பாளர் மு.துரைராசா மற்றும் கிராம மக்கள், ஆலய நிர்வாகத்தினர் எனப்பலர் கலந்து கொண்டனர்.
அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சித்திரை புத்தாண்டை முன்னிட்டு புதிய ஆடைகள் வழங்கப்பட்டது.
நிகழ்வு இறுதியில் ஒழுங்கமைப்பாளர்களால் அன்னதானம் வழங்கப்பட்டதுடன் சிங்கப்பூர் வாழ் இலங்கை தமிழர்களின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட 8 அறநெறிப்பாடசாலைகளுக்கு இடை உணவு வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


































இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










