இலங்கையை முழுமையான டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, உலகின் முன்னணி ஆன்லைன் கட்டண தளங்களில் ஒன்றான PayPal, நாட்டின் உள்நாட்டு வங்கி அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டு இன்று (15.05.2026) அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இந்த சேவையின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதார பார்வைக்கு அமைவாக, உள்ளூர் வங்கித் துறைக்கும் பேபாலுக்கும் இடையிலான இந்த புதிய ஒத்துழைப்பை பிரதமர் வெகுவாகப் பாராட்டினார்.
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை பிராந்திய மற்றும் உலகளாவிய மட்டத்தில் நிலைநிறுத்துவதற்கான ஒரு மாற்றத்தக்க படியாக இந்த முயற்சி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவையானது ஆரம்பத்தில் இலங்கை வங்கி (BOC), கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கி உள்ளிட்ட முக்கிய வங்கிப் பங்காளிகள் ஊடாக வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். மேலும் பல வங்கிகள் வரும் மாதங்களில் இந்த முயற்சியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வளர்ச்சியானது இலங்கையிலுள்ள நுகர்வோர், சுயதொழில் செய்பவர்கள் (Freelancers), தொழில்முனைவோர் மற்றும் வளர்ந்து வரும் வணிகங்கள் பாதுகாப்பான மற்றும் நம்பகமான சர்வதேச கட்டண முறையை அணுகுவதற்கு வழிவகுக்கும்.
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார நிகழ்ச்சி நிரலானது முதன்மையாக அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், டிஜிட்டல் தொழில்முனைவோரை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது. அதேவேளை உலகளாவிய சந்தைகளுடன் இலங்கையின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. சர்வதேச கட்டணச் சேவைகளின் விரிவாக்கம், சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்கள் (SMEs) உலகளாவிய வர்த்தகத்தில் தீவிரமாகப் பங்கேற்பதற்குப் பெரும் ஆதரவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 52% பங்களிப்பை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறை, சர்வதேச சந்தைகளுக்கான மேம்பட்ட அணுகல் மூலம் பெரும் பலனைப் பெறும். வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறத்தக்க உலகளாவிய நிதிச் சூழலை நிறுவுவது, மோசடி மற்றும் பாதுகாப்பற்ற பரிவர்த்தனைகள் தொடர்பான நீண்டகால கவலைகளைத் தீர்க்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இளைஞர்கள் இந்த டிஜிட்டல் மாற்றத்தில் தீவிரமாக ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், அவர்களின் எதிர்கால வளர்ச்சி சமத்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மையில் வேரூன்றி இருக்க வேண்டும் என்பதை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய திறன் கொண்ட திறமையான சுயதொழில் செய்பவர்கள் மற்றும் தொழில்முனைவோர் இலங்கையில் பெருமளவில் உள்ளனர் என்பதை பேபால் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த கூட்டாண்மையானது வெளிநாடுகளில் இருந்து கொடுப்பனவுகளைப் பெறுவதில் உள்ள தடைகளை நீக்கி, தடையற்ற மற்றும் நம்பகமான கட்டணச் சூழலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் வாரங்களில், அந்தந்த வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கான சேவை கிடைக்கும் தன்மை குறித்த மேலதிக விபரங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது நாட்டின் டிஜிட்டல் நிதிச் சூழலை மேலும் வலுப்படுத்தும்.
இந் நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, கௌரவ தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த, பேபால் நிறுவனத்தின் சிரேஷ்ட துணைத் தலைவர் செல்வி நாடியா சயீத், சிரேஷ்ட அரச அதிகாரிகள், கைத்தொழில் துறையின் தலைவர்கள் மற்றும் இலங்கை வங்கி, கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










