இலங்கையின் மொத்த தேயிலை உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் 24.22 மில்லியன் கிலோகிராமாகப் பதிவாகியுள்ளதாக பிரபல தேயிலை ஏல நிறுவனமான போர்பஸ் அன்ட் வோல்கர் தெரிவித்துள்ளது.
அத்துடன் இது 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் பதிவான 26.47 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், 2.25 மில்லியன் கிலோ கிராம் அதாவது 8.49 சதவீத வீழ்ச்சியாகும்.
இக்காலப்பகுதியில் பசுந்தேயிலை உற்பத்தி மாத்திரம் அதிகரிப்பைக் காட்டியுள்ள அதேவேளை, உலர் தேயிலை உற்பத்தி செய்யப்படும் அனைத்து மலைநாட்டுப் பகுதிகளிலும் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.
குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேயிலை பயிர்ச்செய்கை நிலங்களின் அடிப்படையில், தாழ்நிலத் தேயிலை உற்பத்தி 14.40 சதவீத பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்து, 14.76 மில்லியன் கிலோ கிராமிலிருந்து 12.63 மில்லியன் கிலோகிராமாக குறைவடைந்துள்ளது.
அத்துடன், மலைநாட்டு (உயர்நில) தேயிலை உற்பத்தி 6.23 மில்லியன் கிலோ கிராமிலிருந்து 6.19 மில்லியன் கிலோகிராம் வரை 0.69 சதவீதத்தாலும், மத்திய நிலத் தேயிலை உற்பத்தி 5.24 மில்லியன் கிலோ கிராமிலிருந்து 5.14 மில்லியன் கிலோகிராம் வரை 1.83 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளன.
இருப்பினும், 2025 ஆம் ஆண்டு ஏப்ரலில் 220,423 கிலோகிராமாக இருந்த பசுந்தேயிலை உற்பத்தி, 2026 ஏப்ரலில் 238,637 கிலோகிராம் வரை 8.26 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான முதல் நான்கு மாத காலப்பகுதியில் நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தி 83.94 மில்லியன் கிலோகிராமாகப் பதிவாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 88.63 மில்லியன் கிலோகிராம் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், இது 4.69 மில்லியன் கிலோகிராம் அதாவது 5.29 சதவீத வீழ்ச்சியாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த முதல் 4 மாத காலப்பகுதியிலும், பசுந்தேயிலையைத் தவிர உயர்நில, மத்திய நில மற்றும் தாழ்நிலத் தேயிலை உற்பத்திகள் முறையே 2.37 சதவீதம், 6.65 சதவீதம் மற்றும் 6.13 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









