சிசிடிவி (CCTV) கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்காக அபராதம் விதிப்பது போன்று, போலியான குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பி முன்னெடுக்கப்படும் மோசடி குறித்து பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த செய்திகள் போலியான தொலைபேசி எண்களிலிருந்து அனுப்பப்படுவதுடன், அவை இலங்கை பொலிஸ்ஸாரினால் அனுப்பப்பட்டது போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்ஸாரின் கூற்றுப்படி, இந்த செய்திகளைப் பெறுபவர்கள் ஒரு மோசடி இணையதளத்திற்கு வழிநடத்தப்பட்டு, அங்கு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதப் பணத்தை செலுத்துமாறு கோரப்படுகின்றனர்.
பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில், அதிகாரப்பூர்வ ‘GovPay’ கட்டண தளத்தை ஒத்ததாக இந்த போலி இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்ஸார் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது, குறித்த இணையதளத்தை அணுகி பணத்தை செலுத்த முயற்சிப்பவர்களின் கடன் அட்டை (Credit Card) விபரங்கள் உள்ளிட்ட இரகசியத் தகவல்கள் மோசடிக்காரர்களால் திருடப்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் மேலும் எச்சரித்துள்ளனர்.
எனவே, குறுஞ்செய்தி (SMS) அல்லது வாட்ஸ்அப் மூலம் வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புக்களை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், இவ்வாறான செய்திகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரால் உத்தியோகபூர்வமாக குற்றம் சாட்டப்பட்டு, ‘GovPay’ அமைப்பின் ஊடாக உத்தியோகபூர்வ அபராதப் பத்திரம் (Fine slip) வழங்கப்பட்ட பின்னரே போக்குவரத்து அபராதங்கள் செலுத்தப்பட வேண்டும் என்றும் பொலிஸ்ஸார் தெளிவுபடுத்தியுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










