தற்போதைய உலகில் குழந்தைகள் முந்தைய தலைமுறைகளை விட உடல் ரீதியாகச் செயலற்று வருவதாகவும், இது அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலகளவில் ஒவ்வொரு 10 சிறுவர் மற்றும் இளைஞர்களில் ஒருவர் பருமனினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருத்தல், மன அழுத்தம், உணவின் தரம் குறைதல் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுவதைக் குறைத்தல் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, ஒரு குழந்தை தினமும் குறைந்தது 60 நிமிடங்கள் உடல் ரீதியான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
சிறுவயதில் செயலற்ற நிலையில் இருக்கும் குழந்தைகள், வளர்ந்த பின்னரும் அதே நிலையைத் தொடரும் வாய்ப்பு அதிகம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமெரிக்காவின் ரோட் ஐலேண்ட் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் நிக்கோல் லோகன் கூறுகையில், உடல் செயல்பாடுகள் குழந்தைகளின் உடல் நிறை குறியீட்டை (BMI) பராமரிக்க உதவுவதுடன், அவர்களின் அறிவுசார் வளர்ச்சி மற்றும் கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறனை மேம்படுத்துவதாகவும் குறிப்பிடுகிறார்.
பாடசாலைக்குப் பிறகு வாரத்தில் 5 நாட்கள் மிதமான அல்லது தீவிர உடல் செயல்பாடுகளில் ஈடுபட்ட பருமனான குழந்தைகளின் அறிவுசார் மட்டம், அவ்வாறு ஈடுபடாத குழந்தைகளை விட அதிகமாக இருந்தமை ஒன்பது மாத ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடலின் உட்புற உறுப்புகளைச் சுற்றியுள்ள கொழுப்பினால் ஏற்படும் அழற்சி மூளையின் செயல்பாட்டை மந்தமாக்குகிறது. உடற்பயிற்சிகள் மூலம் இந்தக் கொழுப்பு எரிக்கப்பட்டு, மூளையின் ஒருமுகத்தன்மை மற்றும் நினைவாற்றல் வளர்க்கப்படுகிறது.
டென்மார்க்கின் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் உல்லா டொஃப்ட், குழந்தைகளின் உடல் பருமனைத் தடுக்க, அவர்களைச் சுற்றியுள்ள உணவுச் சூழலை மேம்படுத்துதல், திரைகளைப் பார்ப்பதைக் குறைத்தல் மற்றும் தூக்கத்தைச் சீராக்குதல் அவசியம் என்று கூறுகிறார்.
ஐக்கிய இராச்சியத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், வகுப்பறையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதைத் தவிர்க்க, பதிலளிக்கும் போது எழுந்து நிற்றல் மற்றும் வகுப்பறைக்குள் நடத்தல் போன்ற எளிய மாற்றங்கள் மூலம் குழந்தைகளின் வயிற்றுப்பகுதி கொழுப்பு 8% குறைந்து, விளையாட்டில் ஆர்வம் 10% அதிகரித்தமை கண்டறியப்பட்டது.
லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியின் பிளமினியா ரோன்கா, “இது கடுமையான உடற்பயிற்சி பற்றியது மட்டுமல்ல, ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் நேரத்தைக் குறைப்பதன் முக்கியத்துவமே” என்று வலியுறுத்துகிறார்.
யுவதியாகும் போது பெண்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதைக் குறைக்கும் போக்கு உள்ளது. இச்சூழ்நிலையில், பெற்றோர்கள் அவர்களுடன் இணைந்து சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் போன்ற எளிய செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் குழந்தைகளைத் தொடர்ந்து சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும்.
ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் மைக்கேலா ஜேம்ஸ் கூறுகையில், குழந்தைகளுக்குத் திட்டமிடப்பட்ட விளையாட்டுகளை விட, அவர்கள் விரும்பும் செயல்பாடுகளைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தை அளிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.
தண்டனையாக விளையாட்டு நேரத்தைக் குறைப்பதைத் தவிர்த்து, மரத்தில் ஏறுதல், மைதானத்தில் ஓடுதல் போன்ற எளிய இயக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான எதிர்காலத்தை உறுதிப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










