நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் அமைந்துள்ள இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராலயம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தின் நியூசிலாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்துக்கு இணைவாக 28.05.2026 அன்று இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கைக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நிகழ்வில் நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இரு நாடுகளினதும் கலாசார மரபுகளுக்கமைய, இலங்கை மத வழிபாடுகள் மற்றும் நியூசிலாந்தின் பாரம்பரிய ‘மவோரி’ ஆசீர்வாதங்களுடன் ஆரம்ப விழா ஆரம்பமாகின.
இந்த நிகழ்வில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்,
நியூசிலாந்தில் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை நிறுவியமையானது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர, பொருளாதார மற்றும் கலாசார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பத்தைக் குறிப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நியூசிலாந்து வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், நியூசிலாந்தில் வசிக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் அங்கு வாழும் இலங்கை சமூகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
புதிய உயர்ஸ்தானிகராலயம் திறக்கப்பட்டதன் மூலம், நியூசிலாந்தில் வாழும் 30,000க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு மிகவும் திறமையான தூதரக சேவைகளை வழங்கவும், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், கல்வி மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










