மேல் மாகாண தேசிய பாடசாலை அதிபர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்ட நிகழ்வு இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் 02.06.2026 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரினி அமரசூரிய,
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் (Budget) தேசிய பாடசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளின் (வித்யாபீடங்கள்) அபிவிருத்திக்காக, வரலாற்றிலேயே ஒதுக்கப்பட்ட அதிகூடிய தொகையான 13.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், பாடசாலைகளின் புனரமைப்புப் பணிகளுக்காக 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு குழந்தைக்கு அன்பு, அரவணைப்பு மற்றும் பாதுகாப்பை வழங்கும் ஒரு தனித்துவமான இடமாக பாடசாலையை மாற்றுவதற்கான பொறுப்பை அரசாங்கம் என்ற ரீதியில் தாம் மிகுந்த நம்பிக்கையுடன் ஏற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நிகழ்வின் போது, அமைச்சின் சுற்றறிக்கைகளுக்கு அமைய பாடசாலைநடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் நிதி வெளிப்படைத்தன்மையுடன் பாடசாலை அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட நிர்வாகக் கட்டமைப்பை பேணுவது குறித்து மேல் மாகாண அதிபர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்பட்டது. அத்துடன், புதிய கல்விச் சீர்திருத்தத் திட்டங்களுக்கு அமைய பாடசாலைச் சூழலை வடிவமைப்பது குறித்த புரிதலும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதன்போது, பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும்போது எதிர்நோக்க வேண்டியுள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து பிரதமரிடம் நேரடியாகக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள வருகை தந்திருந்த அதிபர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
கல்வித்துறையின் தலைவர்களாக அதிபர்கள் ஆற்றும் பணியின் பொறுப்புணர்வை அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையிலும் உள்ள வளங்களை மேலாண்மை செய்து, பாடசாலைக் கல்வியைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்றும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பிற்குள் நீண்டகாலமாக நிலவி வரும் நெருக்கடிகள் மற்றும் பிரச்சினைகளை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொண்டு, அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கும் ஒரு மாற்றத்தக்க பாதையை நோக்கி இலங்கையின் கல்வியை வழிநடத்துவதற்கான நிலையான திட்டம் அரசாங்கத்திடம் உள்ளது என்றும் அவர் விளக்கமளித்தார்.
மேலும், ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் 23,000 ஆசிரியர்களைப் பதவிகளுக்கு இணைத்துக் கொள்வதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், இந்த வருட இறுதியில் இந்த ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் 2027ஆம் ஆண்டளவில் ஆசிரியர் பற்றாக்குறையை கணிசமான அளவு குறைத்துக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகள் மேம்பாட்டுத் திட்டங்களை விரைவாக முடித்து, மாணவர்கள் அவற்றைப் பயன்படுத்துவதற்கு வழிவகை செய்த பின்னர், 2027ஆம் ஆண்டு முதல் புதிய பாடசாலை அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்துப் பேசும்போது பிரதமர் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










