2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய தரவரிசையின்படி 14 இடங்கள் முன்னோக்கி நகர்ந்து உலகளவில் 67 வது இடத்தைப் பிடித்துள்ளது.
பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம், நாடுகளுக்குள் நிலவும் பாதுகாப்பு, சமூக ஸ்திரத்தன்மை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மோதல்களின் அளவுகள் உள்ளிட்ட பல காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்த குறியீட்டைத் தயாரித்துள்ளது.
உலகளாவிய அமைதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்த 12 வது ஆண்டாக 2026 ஆம் ஆண்டு அமைந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், உலக அமைதி இம்முறை 0.7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
2008 ஆம் ஆண்டு முதல் இந்த உலகளாவிய அமைதிக் குறியீடு வெளியிடப்பட்டு வருவதுடன், அந்த ஆண்டில் இருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில் 119 நாடுகள் குறைந்த அமைதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவிய அமைதிக் குறியீட்டில் ஐஸ்லாந்து முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன், நியூசிலாந்து இரண்டாம் இடத்தையும், சுவிட்சர்லாந்து மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
163 நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்ட இந்த உலக அமைதிக் குறியீட்டில் ரஷ்யா கடைசி இடத்தைப் பெற்றுள்ளதுடன், சூடான் 162-வது இடத்தைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 99 நாடுகளின் அமைதி நிலை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், 62 நாடுகள் தங்களது அமைதி நிலையை மேம்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் இம்முறை அமைதிக்கான அதிக சதவீத வளர்ச்சியை இலங்கை பதிவு செய்துள்ளதுடன், அது 2.3 சதவீத வளர்ச்சியாகும்.
உலகளாவிய அமைதிக் குறியீட்டில் தெற்காசிய பிராந்தியத்தில் பூட்டான் முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், அதன் இரண்டாவது இடம் இலங்கைக்குக் கிடைத்துள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் குறைந்த அமைதியைக் கொண்ட நாடாக ஆப்கானிஸ்தான் பதிவாகியுள்ளதுடன், இந்தியா அந்த பிராந்தியத்தில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










