வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் TIN இலக்கத்தை, சுமார் 40 இலட்சம் பேர் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது வரை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த TIN இலக்கத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
18 வயது பூர்த்தியடைந்த அனைத்து நபர்களும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கமைய நாட்டில் சுமார் 17 மில்லியன் மக்கள் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி திருத்தப்பட்ட சட்டமூலத்திற்கு அமைய, தற்போது பல்வேறு தேவைகளுக்காக TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, வங்கி கணக்குகளை ஆரம்பித்தல், மோட்டார் வாகனங்களை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல், வணிகங்களை பதிவு செய்தல், நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டைகளை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கொடுக்கல் வாங்கல்களுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் குறிப்பிடுகையில், உரிய சட்டத்திற்கு அமைய TIN இலக்கமானது இனிமேலும் இரகசியத் தகவலாகக் கருதப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










