இலங்கையின் பொருளாதாரத்திற்குப் பெரும் பலம் சேர்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களுக்கு, முன்னைய காலங்களில் முறையான தீர்வு வழங்கும் பொறிமுறைகள் இருக்கவில்லை.
இப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போதைய அரசாங்கம் ‘பிரஜைகளை மையப்படுத்திய ஆட்சி’ என்ற நோக்கின் கீழ் இந்த ‘LankaKonnect’ புகார் மேலாண்மை செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் முன்னிலையில் இச்செயலி 16.06.2026 அன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
வெளிநாடுகளில் உள்ள எந்தவொரு இலங்கையரும் தங்களின் புகார்களை வெறும் எழுத்து வடிவில் மட்டுமன்றி, குரல் பதிவுகள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் மூலமாகவும் மிக எளிதாகச் சமர்ப்பிக்க முடியும்.
இச்செயலி மூலம் பதிவிடப்படும் புகாரானது ஒரே நேரத்தில் இலங்கைத் தூதரகம், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE), சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் புகாரளித்த நபரின் கைத்தொலைபேசி ஆகியவற்றுடன் ஒரே நேரத்தில் இணைக்கப்படும். இதனால் விசாரணைகளின் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் (Transparency and Accountability) உறுதி செய்யப்படுகிறது.
இச்செயலியானது ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT-Mobitel) நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப பங்களிப்புடனும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) நிதிப் பங்களிப்புடனும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை உலகெங்கிலும் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) ஆகியவற்றின் ஊடாக முற்றிலும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










