பிரதேச செயலகங்களில் கடமையாற்றுகின்ற கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு பிராந்திய ஆவணங்களை எண்ணிமைப்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பான செயலமர்வு 30.06.2026 அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் அனுமதியுடன் இலாப நோக்கமற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில், உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவனின் வழிகாட்டலில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் பணி புரியும் கலாசார உத்தியோகத்தர்களுக்கு குறித்த வேலைத் திட்டம் தொடர்பான தெளிவு படுத்தல்களை நூலக நிறுவனம் வழங்கியது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக மாவட்டத்தின் வரலாறு, பண்பாடு, மரபுரிமை. சமூக வாழ்வியல் பாரம்பரிய அறிவு, நாட்டார் கலைகள், மத மற்றும் கலாசார மரபுகள், முக்கிய ஆளுமைகள், கல்வி பொருளாதாரம், சுற்றுச்சூழல், கிராம வரலாறுகள், தொல்பொருள் மற்றும் பாரம்பரியச் சின்னங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய விரிவான ஆவணப்படுத்தல் செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கு நூலக நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிகழ்வில் நூலக நிறுவனத்தின் பிரதமர் நிறைவேற்று அலுவலர் ரஞ்சுத மலர் நந்தகுமார் மற்றும் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், கலாசார அலுவலர்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார உத்தியோகத்தர்கள், பிரதேச கலாசார மத்திய நிலையங்களில் கடமையாற்றும் கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.













இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










