நவீனமயமாக்கப்பட்ட நாராஹேன்பிட்டி புகையிரத நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அரச – தனியார் கூட்டுப் பங்களிப்புடன் நாடு முழுவதிலும் உள்ள 100 புகையிரத நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தி நவீனமயமாக்கும் Dream Destination திட்டத்தின் கீழ், வசதிகள் மேம்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்ட நாராஹேன்பிட்டி புகையிரத நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கும் நிகழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் 06.07.2026 அன்று நடைபெற்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், இலங்கை புகையிரத திணைக்களத்தின் மேற்பார்வையில், Clean Sri Lanka செயலகத்தினால் நிலைபேறான திட்டமாக Dream Destination வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

களனிவெளி புகையிரத பாதையின் கொட்டா வீதி மற்றும் கிருலப்பனை உப புகையிரத நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள நாராஹேன்பிட்டி புகையிரத நிலையம், பல வருடங்களாக புனரமைக்கப்படாததன் காரணமாக எவ்வித வசதிகளுமற்ற, பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்டது. அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள் அமைந்துள்ள நாரஹேன்பிட்டி பிரதேசத்திற்கு, இந்த புகையிரத நிலையத்தின் ஊடாகவே பெருமளவிலான மக்கள் தமது போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.

அதன்படி,Clean Sri Lanka செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், ‘MAGA Engineering (Pvt.) Ltd.’ நிறுவனத்தின் நிதி மற்றும் நிர்மாணப் பங்களிப்புடனும், ‘NIO Engineering’ தொழில்நுட்ப மற்றும் சேவை வழங்கலுடனும் இந்தத் திட்டத்தின் நவீனமயமாக்கல் பணிகள் 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. அந்த நவீனமயமாக்கல் செயன்முறையின் கீழ், புகையிரதப் பயணிகள் மேம்பாலம் புதிதாக அமைக்கப்படல், புகையிரத நிலையத்தின் கூரையை அமைத்தல், இரண்டாவது பயணிகள் மேடையை (Platform) விரிவாக்கம், சுகாதார மற்றும் கழிவுநீர்க் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், உட்புற மற்றும் வெளிப்புறங்களுக்கு வர்ணம் பூசுதல், பயணிகள் அமருவதற்கான புதிய ஆசனங்களைப் பொருத்துதல், புகையிரத உத்தியோகபூர்வ இல்லத்தைப் புனரமைத்தல், மின்விளக்கு கட்டமைப்பை நவீனமயமாக்கல் மற்றும் புகையிரத நிலைய உள்பாதையை கார்பெட் இட்டு புனரமைத்தல் உள்ளிட்ட புகையிரத நிலையம் மற்றும் அதனைச் சூழ பௌதீக புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்திற்காக ‘MAGA Engineering (Pvt.) Ltd.’ நிறுவனத்தினால் செலவிடப்பட்டுள்ள நிதி 40 மில்லியன் ரூபாவாகும்.

‘Dream Destination’ திட்டத்தின் முக்கிய நோக்கம் புகையிரத சேவையை அபிவிருத்தி செய்து, பயணிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தி வழங்குவதாகும் என்றும், புகையிரத சேவையின் மனித மற்றும் பௌதீக வளங்களை மேம்படுத்துவது ஒரு பாரிய பணியாகும் என்றும், நவீனமயமாக்கப்பட்ட நாரஹேன்பிட்ட புகையிரத நிலையத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இங்கு தெரிவித்தார்.

அதன்படி, நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, ஒட்டுமொத்த கட்டமைப்பையும் அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் திட்டமாகும் எனவும், பொதுப் போக்குவரத்துச் சேவையை வினைத்திறன்மிக்கதாக்குவதற்கு தற்போது பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

புகையிரத சேவையை விரிவுபடுத்துவதன் கீழ், அடுத்த வருடம் மின்சார புகையிரத சேவைக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அதன் கீழ் கொழும்பு – பாணந்துறை, கொழும்பு – மாகும்புர, கொழும்பு – ராகம ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு முதற்கட்ட மின்சார புகையிரத சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

பொதுப் போக்குவரத்தின் அபிவிருத்தியுடன் அதனுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக அரச – தனியார் ஆகிய இரு துறையினரதும் பங்களிப்புடனான அபிவிருத்தி செயல்முறையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ‘Dream Destination’ என்பது மக்களின் கருத்துகள் மற்றும் அவர்களின் இருப்பு, பாதுகாப்பு, எதிர்காலம் என்பவற்றிற்காகப் பலனளிக்கும் மற்றுமொரு தீர்மானம் என்றும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஹேமந்த வீரகோன் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) செயலகத்தின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் எஸ். பி. சி. சுகீஷ்வர, அதன் மேலதிக பணிப்பாளர் நாயகம் கபில சேனாரத்ன, பணிப்பாளர் எச். பி. எஸ். சாந்த, பணிப்பாளர் (சமூகப் பிரிவு) சிந்தக ராஜகருணா, பணிப்பாளர் (ஒருங்கிணைப்பு) தசுன் விஜேசேகர, உதவிப் பணிப்பாளர் நிஷாந்த அல்விஸ், பிராந்திய ஒருங்கிணைப்பாளர் ஷஷீ பியுஷான், புகையிரத பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய, மேலதிக பொது முகாமையாளர் (செயற்பாடுகள்) சந்திரசேன பண்டார, பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) என். ஜே. இந்திபொலகே, பிரதம பொறியியலாளர் (கைத்தொழில்) பிரியந்த தீகல, MAGA Engineering (Pvt.) Ltd. நிறுவனத்தின் இணை நிர்வாகப் பணிப்பாளர் மேக குலரத்ன, அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி பியதாஸ மதரசிங்க, திட்ட ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ பீரிஸ், மருதானை புகையிரத நிலைய அதிபர் எச். பி. கே. புஷ்பகுமார, நாரஹேன்பிட்ட புகையிரத நிலைய அதிபர் ஆர். எம். ரோஹண உபுல் குமார, அதன் நிலைய அதிபர் (செயற்பாடுகள்) மதுஷ் குணவர்தன ஆகியோருடன் அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects