மன்னார் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் 50 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டத்தின் முதல் கட்ட காற்றாலை டர்பைன்கள் சில வாரங்களுக்கு முன்பு இலங்கையை வந்தடைந்தன.
மீதமுள்ள அனைத்து உபகரணங்களும் தற்போது திருகோணமலை துறைமுகம் வந்தடைந்துள்ளதுடன், அவற்றை இறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 70 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களின் மூலம் பூர்த்தி செய்வதற்கான அரசின் இலக்கை நோக்கிச் செல்லும் முக்கிய ஆரம்ப நடவடிக்கையாக இந்த மன்னார் காற்றாலை மின் நிலையத் திட்டம் கருதப்படுகிறது.
மேலும், 2050 ஆம் ஆண்டுக்குள் இலங்கை அடைய எதிர்பார்க்கும் ‘நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்ற’ (Net Zero Carbon Emissions) இலக்கை எட்டுவதற்கும் இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு மின் அலகை அமெரிக்க டொலர் 0.0465 (இலங்கை ரூபாய் 14.37) என்ற விலைக்கு கொள்வனவு செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கையின் வரலாற்றில் காற்றாலை மின்சார உற்பத்திக்காக செலுத்தப்படும் மிகக் குறைந்த விலை இதுவாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த காற்றாலை மின் நிலையம் தேசிய மின்வலையமைப்புடன் இணைக்கப்பட்ட பின்னர், எரிபொருள் இறக்குமதி குறைவடைவதால் ஆண்டுக்கு சுமார் 4.7 பில்லியன் ரூபாய் அளவிலான அந்நியச் செலாவணியை சேமிக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










