விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையானது, காளான் பயிர்ச்செய்கைக்காக புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், இப்புதிய திட்டத்தின் கீழ் 250 காளான் வளர்ப்புப் பைகளைக் கொண்ட காளான் பயிர்ச்செய்கை இல்லமொன்றை, சுமார் 2,025 ரூபா காப்புறுதிக் கட்டணத்தில் மூன்று மாத காலப்பகுதிக்கு காப்புறுதி செய்ய முடியும்.
ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட காளான் பயிர்ச்செய்கையானது நோய்கள் அல்லது பூச்சித் தாக்கங்களினால் சேதமடைந்தால், இக்காப்புறுதித் திட்டத்தின் கீழ் 22,500 ரூபா இழப்பீடு வழங்கப்படும்.
விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைவாக காளான் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளே இக்காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள தகைமையுடையவர்களாவர் என விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத நஷ்டங்களில் இருந்து பயிர்ச்செய்கையாளர்களைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
நாட்டில் காளான் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கவும், இத்துறையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு முறையான பாதுகாப்பை வழங்கவுமே விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையினால் இந்த விசேட காப்புறுதித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










