மட்டக்களப்பில் பாதுகாப்பான புலம் பெயர்வு மற்றும் மனிதக்கடத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பழைய மாவட்ட செயலகத்தில் 22.07.2026 அன்று நடைபெற்றது.
பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதுடன், மனிதக் கடத்தலைத் தடுக்கும் சமூக அடிப்படையிலான ஒருங்கிணைந்த செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளில் எட்டு மாத காலத்திற்கு இவ் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பாதிக்கப்படக்கூடிய இளைஞர்கள், பெண்கள் மற்றும் புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கான பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான அறிவூட்டல், மனிதக் கடத்தல் தொடர்பான அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு, சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பற்றிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மேலும், சமூக மட்டத்தில் மனிதக் கடத்தலைத் தடுக்கும் வகையில் பல்துறை பங்குதாரர்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சமூக ஆதரவு வலையமைப்புகளை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகளும் இத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது.
இத்திட்டம் Eastern Self-Reliant Community Awakening Organisation (ESCO) அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், Canada Fund for Local Initiatives (CFLI) நிதி ஆதரவினால் செயல்படுத்தப்படுகிறது.
இந் நிகழ்வின் வளவாளராக ESCO நிறுவன திட்ட ஆலோசகர் வே.காண்டிபன் அனுபவ ரீதியான நிகழ்வுகளை சுட்டிக்காட்டி அதிகாரிகளுக்கு தெளிவூட்டியமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய வேலைத்திட்டங்கள் ஊடாக பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிப்பதோடு, மனிதக் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் இருந்து சமூகத்தின் பாதிப்புக்குள்ளாகக்கூடிய மக்களை பாதுகாப்பதே முக்கிய நோக்கமாகும்.
இதன் போது கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் மக்களுக்கு பாதுகாப்பான புலம்பெயர்வை உறுதிப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றாக கடமையாற்ற வேண்டும் என்றார்.
இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், ESCO நிறுவன பணிப்பாளர் எஸ்.ஸ்பிரித்தியோன், கிராம நிர்வாக உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள், மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ரமணபிரசாத், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ESCO நிறுவனமானது மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் நீண்ட காலமாக பாதுகாப்பான புலம்பெயர்வை மேம்படுத்துவதற்கான தகவல் நிலையத்தின் மூலம் சேவையாற்றி வருகின்றது.












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










