தரமான கல்வி முறையொன்றைக் கட்டியெழுப்புவதற்காக ஆசிரியர் சேவையின் தொழில்சார் தன்மையை மேம்படுத்துதல், ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்த்தல், உயர்கல்வி நிறுவனங்களின் மனித வளத்தை வலுப்படுத்துதல் மற்றும் கல்வித் துறையில் காணப்படும் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குதல் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பாடசாலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல், ஆசிரியர் இடமாற்றச் செயன்முறையை முறையாக முன்னெடுத்தல் மற்றும் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பில் கலந்துரையடல்கள் இடம்பெற்றன.
குறிப்பாக, விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் மற்றும் ஆசிரியர் தேவைகள் காணப்படும் பிரதேசங்களை அடையாளம் கண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பாடசாலைகளுக்கு விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆசிரியர் இடமாற்றச் செயன்முறையை வெளிப்படைத்தன்மையுடன், அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளுக்கு அமைவாக நடைமுறைப்படுத்துதல், பின்தங்கிய பிரதேச சேவை கொடுப்பனவுகளை வழங்கும் முறைமை மற்றும் பாடசாலைகளின் கஷ்டநிலைமையைத் தீர்மானிப்பதற்கான அளவுகோல்களை மீளாய்வு செய்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
உயர்கல்வித் துறையைப் பொறுத்தவரையில், பல்கலைக்கழகங்களில் காணப்படும் கல்விசார் பணியாளர் வெற்றிடங்களை நிரப்புதல், தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) செயற்றிறனை மேம்படுத்துதல் மற்றும் கல்வித் துறையில் தர உறுதிப்படுத்தல் செயன்முறையை வலுப்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், பாடசாலை காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகளுக்கான உள்ளடக்கக் கல்வி வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அதற்குத் தேவையான கொள்கை ரீதியான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் கௌரவ அமைச்சர்கள், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










