உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இந்த ஆண்டின் இறுதி வரை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் நிலவினால், இலங்கையால் பணவீக்கத்தைச் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே மத்திய வங்கி ஆளுநர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
“இந்த ஆண்டின் இறுதி வரை எண்ணெய் விலை சுமார் 80 டொலர் அளவில் இருந்தால், எம்மால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும். எனினும், ஏதேனும் எதிர்பார்க்காத மாற்றம் ஏற்பட்டால், அது நிச்சயமாக ஒரு சவாலாக அமையும்” என்று அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய வலுசக்தி விலையேற்றம் காரணமாக பணவீக்கம் மற்றும் உள்ளூர் நாணயத்திற்கு ஏற்படும் அழுத்தங்களைக் கையாண்டு இலங்கை செயற்பட்டு வரும் பின்னணியிலேயே அவர் இக்கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலும் அடுத்த ஆண்டிற்குள் பிரவேசிக்கும் போதும் இலங்கையின் பணவீக்கம் மத்திய வங்கியின் 5% என்ற இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியினால் மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பணவியல் கொள்கை நடவடிக்கைகள் மற்றும் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் இந்நிலைமை சீரடைவதற்குக் காரணமாக அமைந்தன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் தொடர்ந்து நிலவியபோதிலும், கடுமையான நிபந்தனைகள் மற்றும் அதிக விலைகள் காரணமாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பாரிய பாதகமான தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4% முதல் 5% வரையான அளவில் மிதமானதாக இருக்கும் என அவர் எதிர்பார்க்கிறார்.
2022 ஆம் ஆண்டில் நாட்டின் இறையாண்மைக்கடன் செலுத்த முடியாமல் போனதில் முடிந்த பொருளாதார நெருக்கடியிலிருந்தும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தில் இணைந்த பின்னரும் இலங்கை தொடர்ந்து மீட்சியடையும் செயன்முறையில் ஈடுபட்டு வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் நான்கு வருட திட்டம் 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதன் அடுத்தகட்ட மீளாய்வு இந்த ஆண்டின் நவம்பர் அல்லது டிசம்பர் மாதமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு பங்குச் சந்தைக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் மத்திய வங்கி ஆளுநர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு விஜயம் செய்துள்ள நிலையிலேயே இந்த நேர்காணலில் பங்கேற்றுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









